
காவிரியின் கடைசிக் கிளையாறும் முத்துப்பேட்டையில் கடலில் கடக்க, அதற்குத் தெற்குப் பக்கம் இருந்த நிலமெல்லாம் வானம் பார்த்த பூமியாக ஆனது. அந்த ஆண்டுச் சுழற்சியில் வந்த பிங்களத்தில் மழை நின்றது. பின் துந்துபி ஆண்டு வரை மழைப் பொழிவு இல்லை. பஞ்சத்தில் பயிர் போக, மரநாய், பூனை, சாரைப்பாம்பு எனத் தின்னத் துவங்கி ஊரில் இறுதியாக எஞ்சியிருந்த கடைசி எலியும் தீர்ந்து போன சமயத்தில் ஊரைவிட்டு மொத்தமாக கிளம்பி வடக்குத்திசை பார்த்து நடந்தார்கள். விதைநெல்லை சமைத்து கட்டுச் சோறாக்கிக் கொண்டனர். பத்துக் கல் தூரம் போனதும்தான் அதைப் பிரித்து தின்ன வேண்டும் என சொல்லி வைத்துக் கொண்டனர். ஆனால், ஊர் எல்லையைத் தொடும் முன்னரே ஒருத்தி அதைப் பிரித்து ஒரு கவளம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
https://vasagasalai.com/kavalam-sirukathai-kaliprasath-vasagasalai-85/