
முன்னொரு காலத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு அதியமான் என்ற பெயரே கிலியூட்டியதாம். பதுங்கிப் பாயும் ருத்ர வேங்கையென்றால் இவர்தான். எதிரிகளானவர்கள் தப்பித்துப் போகாதபடி எல்லாத்திசையிலுமிருந்து போக்குக் காட்டி ஒருதிசையில் மட்டும் அணியைப் பலப்படுத்தி தாக்கும் வியூகங்கள் அமைத்தவராம். “ஒரு சிகரெட்டை ஊதி முடிப்பதற்குள் அந்தப் பெடியன்களை நசுக்குவேன்” என்ற பிற்பாடு, அதியமானின் படை நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் வியக்க வைத்ததாம். வெறுமென தாக்குதல் செய்து கொல்வது மட்டுமல்ல, ஆயுதங்களையும் மீட்கவேண்டுமென கட்டளை பிறப்பித்தாராம். எதிரியானவன் சொல்லுவதைப் போல நாங்கள் பொடியங்களாக இருந்தாலும், எவருந்தான் வெல்லமுடியாதென சொல்லும் பொறுப்பு எங்களுடையதென அதியமான் போர்வெறி கொண்டாராம். இழப்புக்களுக்கு அஞ்சேன். இழந்துவிட உயிர் மட்டுமே இருக்கிறதெனச் சொல்லி, எதிரிகளின் காலடியைத் தேடித் தேடிப் பாய்ந்தனாரம். அதியமான் என்றொரு சமர்க்கள மன்னன் என்று தலைவர் அவர்களே மணலாற்றில் பாராட்டியதாக கதையுமுண்டு.
ஒருமுறை அதியாமனும் அவனது அணியைச் சேர்ந்த நால்வரும் சுற்றிவளைக்கப்பட்டனர். இனி மீள்வது கடினமென அணியாட்கள் சொன்னதும், அதியமான் யார் மீள்வது என்று கேட்டிருக்கிறார். ஏனையவர்கள் எதுவும் விளங்காமல் முழிக்க, இன்னொரு அரை மணித்தியாலம் அவங்கள் அடிக்கிறத பாதுகாப்பாய் இருந்து வேடிக்கை பார்க்கலாம். அதுக்குப் பிறகு நானொரு திட்டம் சொல்லுகிறேன் என்றிருக்கிறார். இவர்களை சுற்றிவளைத்த எதிரியினர் கடுமையான தாக்குதலைச் செய்கின்றனர். அதியமான் தன்னுடைய அணியிலுள்ளவொருவரை உயரமாக நிற்கும் மரத்தில் ஏறுமாறு சொல்லுகிறார். எவ்வளவு பேர்கள், என்று ஆட்களை ஒரு எண்ணுகிறார்கள். திட்டம் தீட்டப்படுகிறது. காடு சொந்தப் புதல்வர்களுக்கு வழியமைக்கும். அவர்களை அது பாதுகாக்கும் என்கிறார். ஐந்து பேரும் சேர்ந்து தாக்குதல்களைச் செய்கின்றனர். எதிரியானவர்களைத் தாக்கி அவர்களிடமிருந்து பெறுகிற ஆயுதங்களின் வழியாக மிஞ்சியிருப்போரை தாக்கினார்கள். அந்தச் சுற்றிவளைப்பை முறியடித்து இரவோடு இரவாக அதியமான் அடைக்கலம் புகுந்த வீடுதான் எங்களுடையது என்றாள் அம்மா.
அன்றிரவு தொண்டையிலும், வயிற்றிலும் வழியும் ரத்தத்தை கையால் பொத்தியபடியிருந்த ஒருவரை நான்கு பேர் அழைத்து வந்தனர். கதவைத் திறந்து எல்லோரையும் உள்ளே வரச்சொன்னேன். லாம்பு வெளிச்சம் போதாமலிருந்தது. இரண்டு குப்பி விளக்குகளில் வெளிச்சம் ஏற்றினோம். விளக்கு வெளிச்சத்தில் குருதி நிறமாயிருந்தது. வந்திருந்தவர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுத்தேன். தங்களிடமிருந்த மருந்துகளால் காயத்தைச் சுத்தப்படுத்தினார்கள். ஒரு பொருள் மீதமில்லாமல் தடயங்கள் எதுவும் விடுபட்டிருக்கின்றனவா என்று சரிபார்த்தனர். போராளிகளுக்கு தேத்தண்ணியும் ரொட்டியும் சுட்டுக் கொடுத்தேன். காயப்பட்டிருப்பவர் பெயர் அதியமான் என்றார்கள். நான் அவரருகே ஓடிச்சென்றேன். தரையில் படுத்திருந்த அவரது கண்களை உற்றுப் பார்த்தேன். என்மனம் வீரனே! வீரனே! என்று பறைகொட்டியது. எனதுள்ளே மலர்ந்தது ஏதென்று அறியாத அதிசயத்தின் சிறுமலர். அவருடைய விரல்களை தொட்டுப் பார்த்தேன். அதியமான் என்றழைத்தேன். ஒரு வீரனின் அருகமைந்த மங்கை நானென நிமிர்ந்தேன்.
இவரை இப்போதுள்ள சூழலில் அழைத்துச் செல்ல முடியாததால், இங்கேயே இருக்கட்டும். சில நாட்கள் கழித்து நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போயினர். நான் அதியமானுக்கு அருகிலேயே அமர்ந்தேன். உடலினில் எரியும் காயத்தோடு அரற்றினார். தண்ணீர் கொடுத்தேன். சிறுநீர் கழிக்க வேண்டுமெனச் சொல்லி எழுந்தார். ஒரு சட்டியை எடுத்து வந்து கொடுத்தேன். “இல்லை, நான் வெளியே சென்று வருகிறேன்” என்றார். வேண்டாமென்று மறுத்தேன். நான் திரைமறைவில் நின்று கொண்டேன். சிறுநீர் கழித்து முடிந்ததும் அழைத்தார்.
“உங்களின் பெயர் என்ன?” விளக்கொளியில் அவரது முகம் காவியச் செழுமையோடிருந்தது. எனது பெயரைச் சொன்னேன். ஒரு மெல்லிய தலையசைப்பு. அவர் அப்படியே உறங்கிப்போனார். அதிகாலையிலேயே ஆஸ்பத்திரியில் தாதிக் கடமை முடித்து வந்திருந்த அம்மா வீட்டிற்குள் படுத்திருப்பவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
“அம்மம்மாவுக்கு என்ன அதிர்ச்சி?” என்று கேட்டேன்.
“பின்ன. ஒரு குமர்ப்பிள்ளை தனிய இருந்த வீட்டில ஆரெண்டு தெரியாத ஆம்பிளை படுத்திருந்தால்” என்று அம்மா சிரித்துக் கொண்டு சொன்னாள்.
“ஆரடி மோளே இது. இயக்கப்பெடியனே”
“ஓமனே, இவர்தான் அதியமானாம்”
“ஐயோ! இவனைத் தான் கடுமையாய் தேடித் திரியிறாங்கள். பிள்ளைக்கு சரியான காயம் போல கிடக்கு” என்றபடி காயத்தைப் பார்த்தாள். கொஞ்சம் பெரிய காயந்தான். சீவிக்கொண்டு போயிருக்கு” என்றாள்.
அதியமானின் காயமாற தேவைப்பட்ட மருந்துகளை அம்மா அடுத்தநாள் கடமை முடித்து வரும்போது களவாக எடுத்து வந்தாள். அவரது காயத்தைச் சுத்தப்படுத்தி மருந்தைக் கட்டிவிட்டோம். ஐந்து நாட்களாகியும் அதியமானைத் தேடி யாரும் வரவில்லை. வெவ்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. போராளிகள் தீக்குழம்பின் வழியாக தப்பித்து வென்றனர். அதியமானுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தேன். வீட்டிற்கு சொந்தக்காரர்கள் யாரேனும் வந்தால், படலையில் வைத்தே கதைத்து அனுப்பினேன். யாரையும் நம்பமுடியாவொரு கொடுங்காலம்.
“உங்களைப் பற்றித்தான் நாடு முழுக்க ஒரே கதையாம். தங்கட தாக்குதலில நீங்கள் செத்துப்போய்ட்டிங்கள் எண்டு இந்திய ஆர்மி சொல்லியிருக்கு” என்றேன்.
“அவங்களுக்கும் என்னைக் கொல்லுறதுக்கு ஒரு ஆசையிருக்கு. ஆனால் நீங்கள் காப்பாற்றிப் போட்டியள்” என்றார்.
“எனக்குமொரு ஆசையிருக்கு” என்று சொல்ல எங்கிருந்து உந்தல் வந்ததென தெரியாமல் விக்கித்தேன். நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
“என்ன சொன்னியள்” என்று அதியமான் மீண்டும் கேட்டார்.
நான் ஒன்றுமில்லையென தலையசைத்தேன் என்றாள் அம்மா.
“அம்மா, நீங்கள் அதியமானை விரும்பினியளோ”
“எந்தப் பிள்ளை அவரை விரும்பாமல் இருப்பாள்.”
சுடுகலன் தாங்கிய பகைவர்க்கு நடுக்கம் வர, இவரது பெயரே போதுமென்று சொல்வார்கள். அதியாமனின் கண்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பவை. நிலத்தின் மீது புரளும் சருகின் கீழே ஊர்ந்து செல்லும் மரவட்டையின் கால்களின் சத்தம் வரை அறிவர். அவரொரு நாயகன். வீரயுகத்தின் சமர்க்களிறு. எதிரிகளை வெல்லும் ஆற்றலும் வெறியும் கொண்டவர். எங்களுடைய வீட்டிலிருந்து நள்ளிரவு நேரத்தில் போராளிகளோடு விடைபெற்றார். என்னையழைத்து தன்னுடைய நினைவாக வைத்திருக்கும்படி ஒரு சின்னஞ்சிறிய புதுத்தோட்டாவை கொடுத்தார். உள்ளங்கைக்குள் பொத்தினேன். பிறகு அதியமான் என்பவரை பல தடவைகள் கொன்றனர். ஆனால் உயிர்த்தெழுந்தபடியே இருந்தார். மானுட வரலாற்றில் அதிகமாக உயிர்த்தெழுந்தவர்கள் மூவர் தான். ஒருவர் இயேசு. இரண்டாமவர் பிரபாகரன். மூன்றாமவர் அதியமான் என்ற பகிடியை முதன்முறையாக உன்னுடைய அம்மம்மா தான் வன்னிக்குச் சொன்னாள் என்றாள் அம்மா.
இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டின் இறுதியில் அதியமான் தான் என்னை அடையாளம் கண்டார். எங்கே இடம்பெயர்ந்து இருக்கிறீர்கள் எனக் கேட்டார். அம்மாவை குசலம் விசாரித்து, தன்னுடைய முகாமிலிருந்து இரண்டு மீன் டின்களை எடுத்துத் தந்தார். இரண்டொரு நாளில் கிளிநொச்சியும் விடுபட்டுப் போய்விடுமென்றார். நாங்களிருக்கும் முகவரியை கேட்டு எழுதினார். “வள்ளிபுனத்தில் வந்து சந்திக்கிறேன். பத்திரமாகப் போ” என்றார்.
அதியமான் கொஞ்சம் சுடுதண்ணி. அம்மா விசர் நாய் என்றுதான் கூப்பிடுவாள். எவருடனும் எரிந்து விழுவார். தனக்கு கீழே வேலைபார்க்கும் போராளிகள் சிறிய தவறு செய்தாலும் நேரும் கதியோ சொல்ல இயலாதது. அதியமான் எங்களுடைய வீட்டிற்கு வந்து போகிறாரென்று தெரிந்து வேறு சில பிரிவுப் போராளிகள் வருவதை நிறுத்திக் கொண்டனர்.
வீட்டிற்குச் சென்றதும் நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன். “அவனுக்கு வீடு வாசல் போற பழக்கமில்லை. எப்பவும் இயக்கம், சண்டையென்று இருப்பான். நீ வில்லங்கப்படுத்தி கூட்டிவந்திருக்கலாம்” அம்மா சொன்னாள். பின்நேரம், குழல் புட்டும், உருளைக்கிழங்கு குழம்பும் வைத்து, கருவாட்டை வெங்காயத்தோடு பொரிச்சு ஒரு பொதியாக கட்டினாள். அதியமானைப் பார்த்த முகாமில கொண்டே குடுத்திட்டு வா என்றாள். விசுவமடுவுக்கு ஈருருளி பறந்தது. அந்த முகாமைச் சென்றடைந்தேன்.
வாசலில் நின்ற போராளியிடம், “அதியமான் நிக்கிறாரோ, அவரிட்ட இந்தச் சாப்பாட்டைக் கொடுக்க வேணும்” என்றேன். வெளிப்பக்கமாக கதவைத் திறந்தார். உள்ளே போனேன். உடமைகளைச் சரிபார்த்து, எங்கேயோ புறப்படத் தயாரானார். “அம்மா குழல் புட்டுத் தந்துவிட்டவா” என்று குரல் கொடுத்தேன். என்னைப் பார்த்தவர் “சிறுவா… அங்கேயிருந்து எதுக்கடா இந்த நேரம் வந்தனி. கொம்மாவுக்கு விசர்” என்றவர் சாப்பாட்டை வாங்கி, தன்னுடைய பையில் திணித்தார். ஒரு அரைமணித்தியாலம் பிந்தி வந்திருந்தால் என்னை நீ பார்த்திருக்கமாட்டாய். தீபன் அண்ணா களத்துக்கு வரச்சொல்லியிருக்கிறார்” என்றார். அவர் விடைபெறும் வரை, அங்கேயே இருந்தேன். எனக்கு ஒரு சிறிய பேரீச்சம்பழ பைக்கற்றும், இரண்டு மாமைட்டும் தந்து முத்தமிட்டார். நடக்கிறத பார்க்கலாம். திரும்ப வரும்போது வீட்டுக்கு வருகிறேனென்று அம்மாட்டச் சொல்லு” என்றார்.
சிலமாதங்கள் கழித்து முள்ளிவாய்க்காலில் வைத்து அதியமானை இயக்கம் சுட்டுக்கொன்றது. அவரின் மீது வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இயக்கத்தின் படையியல் ரகசியங்களை எதிரிகளிடத்தில் தெரியப்படுத்தியமை முதலிடம் பிடித்தது. அதியமானுக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட தகவலை அறிந்த போது அம்மா துடியாய் துடித்தாள். “இத்தனை வருஷமாய் சண்டையில நிண்டு, வாழ்க்கையை இழந்தவனுக்கு நீங்கள் குடுக்கும் மரியாதை இதுவோவென” முக்கியப் பொறுப்பாளர்களைத் தேடிச்சென்று திட்டித்தீர்த்தாள். அதியமான் இப்படியான துரோகத்தை செய்வாரென நாங்களும் முதலில் நம்பவில்லையென அவர்கள் பதில் சொல்லினர். ஒரு முக்கிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரொருவர் நாங்களிருந்த பகுதியால் நடந்து போனார். அவரை வழிமறித்த அம்மா அதியமானை விசாரணை செய்தவர்கள் ஏதோ பிழையாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்களென கடிந்தாள். அவரொரு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து விலகி நடந்தார்.
“சனங்களின் ஆற்றமையையும், கேள்விகளையும் பொருட்படுத்தாமல் விலகி நடக்கும் பாதங்கள் போராளிகளுடையதல்ல. அவர்கள் தங்களை ராஜாக்களென எண்ணுபவர்கள். தேசத்திலுள்ள ஒரு தாயின் கண்ணீரை மதியாதவன் எதன் நிமித்தமும் விடுதலைக்கு வழி சமைப்பவன் அல்ல. உங்களுடைய துவக்குகளுக்கு இலக்குகள்தான் தேவையென்றால் என்னைப் போன்றவர்களைச் சுடுங்கள். ஒருபோதும் அதியமான் போன்ற அதிதீரர்களை கொல்லாதீர்கள். அவர்களின் ஆன்மாவுக்குத் துரோகம் இழைக்காதீர்கள்” என்றாள்.
அம்மா அதியமானை நினைந்தழுதாள். பதுங்குகுழியில் கண்ணீரின் ஈரம் சிதம்பியது. அவனைத் துரோகியெனச் சொல்ல யாருக்குந்தான் அருகதையில்லையென கோபங்கொண்டு கத்தினாள். எந்தக் கதறலுக்கும் பெறுமதியில்லாத பாழ்நிலத்தின் மீது மிலேச்சத்தனங்கள் போட்டிக்கு நிகழ்ந்தன. இயக்கம் அழிந்து போகப்போகிறதென அம்மாவும் சொல்லிய ஒரு பகற்பொழுதில் இரக்கமற்ற வகையில் வரலாற்றின் பாறையில் சூரியவொளி மங்கிச் சரிந்தது.
அதியமான் தனக்களித்த பரிசான தோட்டாவை எறிந்துவரச் சம்மதியாத அம்மா, தன்னுடைய ஆதிக் குகைக்குள் அதைச் சொருகினாள். நிர்வாணமாக நானும் அவளுமாய் சோதனை செய்யப்பட்டு மீண்டோம். சனத்திரளின் ஓலம் இருளின் பாலையாக பொழுதை ஆக்கியிருந்தது.
“நான் உன்னுடைய தாய். என் குருதியில் உதித்தவன் நீ. இந்தத் தோட்டாவை எனக்குப் பரிசளித்தவன் அதியமான். அவன் உனக்குத் தியாகியோ, துரோகியா அல்ல. உனது தந்தை” என்று சொல்லியபடியே அந்தப் பரிசை வெளியே எடுத்தாள். அது பொலிவு குன்றாத மினுமினுப்போடு இருந்தது. கைகளுக்குள் பொற்றினாள். தன்னுடைய குரல்வளையில் அதனை வைத்து ஒரேயடியாக உள்ளங்கையால் அழுத்தினாள்.
அம்மாவின் குருதியிலிருந்து அந்தத் தோட்டாவை எடுத்து கடலினில் வீசினேன். உயிர்ஈந்த தேவபித்ருக்களோடு அதுவும் நீந்தியது.