01

அலையெண்ணும் சிறுமி

தேயும் நிலவில் விழி நகர்த்தினாள்

தன் மடியில்

கண் வளர்ந்த நாய்க்குட்டியை

பூமியில் இறக்கினாள்.

பெருங்கடலின் காற்றில் மோதுண்டு

சிறகசைக்கும் கடற்பறவை

சத்தமிட்டது.

எழுந்த சிறுமி

கைகளை ஏந்தியபடி

கடல் நோக்கி விரைந்தாள்.

ஏந்திய கைகளில் கனத்திருப்பது

வெறுமை

கரைப்பாளா?

பெருக்குவாளா?

கொந்தளிக்கும் சமுத்திரம்.

 

02

இப்பிறவி

பொல்லாத குருதியால்

எழுதப்பட்டிருக்கிறது.

அதுதான்

இன்னும் கசிகிறது.

 

03

சோதர!

உனக்காக பிரார்த்திக்கிறேன்

உன் வாதைகள் அழிந்துபோம்

நூற்றாண்டு சொன்னது,

ஆனால்

பிரார்த்திக்கும் உங்களாலும் வாதையுண்டு

அவைகளும் அழிந்து போகுமா?

நூற்றாண்டின் மானுடன் கேட்டான்.

 

04

என்னிடமும் ஒரு கப்பலிருந்தது

வெள்ளப்பெருக்கில்

அதனை விட்டு கையசைத்தோம்.

வீட்டின் முற்றத்திலிருந்து

புறப்பட்டுப் போனது.

அது கடலுக்குச் சென்றிருக்கும்

அது தண்ணீரில் மூழ்கியிருக்கும்

அது காகிதமாய் கரைந்திருக்கும்

என்றவர் பலர்.

கப்பல் என்பதை மறுக்கவில்லை எவரும்.

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top