
ஆகுதி ஒருங்கிணைக்கும் மரபு – கலை – தொன்மம் கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.07.2024) மாலை, டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உரையாடப்படவிருக்கும் நூல்கள் அறிவியக்கத்தளத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஆனந்த குமாரசுவாமி அவர்களின் “சிவானந்த நடனம்” நூலினை இதுவரை வாசித்திராத, அறிந்திராதவர்களுக்கு எழுத்தாளர் தாமரைக்கண்ணன் அவர்களின் உரை சிறந்த அறிமுகமாகவும், உந்துதலாகவும் அமையுமென உறுதிப்படக் கூறலாம். பி.கே. பாலகிருஷ்ணனின் “நாவெலனும் கலை நிகழ்வு” புத்தகம் அசாதாரணமானது. தமிழில் மொழிபெயர்த்த மரியாதைக்குரிய அழகிய மணவாளன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூல் குறித்து உரையாற்றவுள்ள எழுத்தாளர் இளம்பரிதி நம்பிக்கைக்குரிய இளம் படைப்பாளி. அ.கா. பெருமாளின் “வயக்காட்டு இசக்கி” நூல் குறித்து உரையாற்றவுள்ள எழுத்தாளர் மயன் பரந்துபட்ட வாசிப்பு கொண்டவர். மண்ணின் கதைகளை எழுதி வருகிறார். எதிர்காலத்தில் தனித்துவமான படைப்பாளியாக மிளிரக்கூடியவர்.
கலை இலக்கிய உரையாடல்கள் மீது தீவிரமும், ஆழமும், அவதானிக்கும் திறனும் கொண்டவர்களை அன்புடன் அழைக்கிறோம். இந்த நிகழ்விற்கு இணை அனுசரணை வழங்கும் டிஸ்கவரிக்கும், ஊடக அனுசரணை வழங்கும் சுருதி தொலைக்காட்சிக்கும் நன்றி.