
போதமும் காணாத போதம் – துங்கதை நூலுக்கு எழுத்தாளரும், கணையாழி ஆசிரியருமான மரியாதைக்குரிய ம. இராசேந்திரன் அவர்கள் எழுதிய விமர்சனக் கட்டுரை இன்று “தமிழ் இந்து திசை’ நாளேட்டில் வெளியாகி பெருத்த கவனத்தையும், புதிய வாசகத் திறப்புக்களையும் வழங்கியுள்ளது. என்னுடைய எழுத்தூழிய பயணத்தில், ம. ரா அவர்கள் ஆதரவும், உறுதுணையும் வழங்கியவர். என்னுடைய இரண்டு நூல்களை வெளியிட்டு வைத்திருக்கிறார். எல்லா வகையிலும் இந்தக் கட்டுரை முக்கியமானது.
கட்டுரையின் விரிவான வடிவம்
ஈழ யுகம் : சொற்களால் ஒரு நடுகல்
ம .இராசேந்திரன்
‘போதமும் காணாத போதம்’ -அறிவும் தொட முடியாத பேரறிவு என்று கடவுளைச் சொல்கிறார் குமரகுருபரர். நமது அனுபவ எல்லைகளைக் கடந்த – நமது காலத்தில் நடந்த – நம்ப முடியாத அனுபவங்களின் திரட்சியாக இருக்கிறது அகரமுதல்வனின் போதமும் காணாத போதம் .
காந்தியைச் சுட்டுக் கொன்ற நினைவு நாளில் இணையத்தில் தொடங்கி இருக்கிறார். இருபத்தைந்து அத்தியாயங்கள்.
உலகம் போற்றும் மனுஷத்துவம், முகம் குப்புற நந்திக் கடலில் மிதந்தது. அதன் பிடரியில் எத்தனையோ தேசங்களின் தோட்டாக்கள் துளைத்திருந்ததைக் கண்டேன்.’ என்பதால் கனவும் நினைவுமாகப் படைக்கப் பட்டிருக்கிற இது, அவரது தன் கதையாகவும் இருக்கிறது.
தமிழின் முதல் ‘துங்கதை’ என்று கூறுகிறார். ‘துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே’ என்பது கந்த புராணத்தில் சூரபத்மன் யுத்தப்படல வரி.
தமிழீழ யுத்தப் படலம், கதைக் களமாகி இருக்கிறது. ‘குந்த ஒரு பிடி நிலமும் எரிய ஒரு பிடி நிலமும் சொந்தமாய் வேணும்’ என்று போராடியவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். புராணங்களில் மட்டும்தான் கெட்டவர்கள் தோற்கிறார்கள். புராணங்கள் வெற்றியைக் கொண்டாடும். கலிங்கத்துப் பரணி கூட , களத்தில் பார்ப்பன சமண புத்த பேய்களுக்குக் கூழ் வார்த்து வெற்றியைக் கொண்டாடுகிறது.
ஆனால், மக்கள் தங்களுக்காகப் போரிட்டு மாண்டவர்களின் வீரத்தைக் கொண்டாடுகிறார்கள்.
‘சொந்த வீட்டிற்குச் செல்வதற்கும் வழியற்றிருக்கும்’ அவர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்; அது புதைகுழி அல்ல விதைகுழி; உயிர் பிரிந்த பிறகு அவர்களின் உடல் வெற்றுடல் இல்லை, வித்துடல் என்றெல்லாம் போதமும் காணாத போதம் கொண்டாடுகிறது. அதனால்தான் ‘வெம்மை கலந்து வெளிப்படும் மூச்சு’ என்று அகரமுதல்வன் குறிப்பிடுகிறார்.
தமிழீழப் போர்க் காலத்திலும் களத்திலும் அடிக்கடி ‘ இடம் பெயர்ந்த அகரமுதல்வனின் சிறு பாதங்களை ஏந்திக் கொஞ்சிய அம்மா “ஒரு நாளைக்கு இந்த நடை யெல்லாம் நிண்டு நிம்மதி வந்திடும் ராசா” என்று நம்பிக்கை தந்திருக்கிறார். ‘ முள்ளி வாய்க்கால் வரை அப்படியான நிம்மதிக்காகவே காத்திருந்தோம்’ என்று முன்னுரையில் சொல்கிறார். ஓரிடத்தில் கூட நிலையாக இருக்க முடியாமல் இடம் பெயரும் அல்லல்கள். கூடவே கும்பிடும் தெய்வங்களை மனதிலும் உடலிலும் சுமப்பதும் மண்ணுக்குள் புதைப்பதுமான அவலங்கள்.
மதுரா விஜயம் எனும் வடமொழி நூலில் திருவரங்கப் பெருமாளின் செப்புத் திருமேனியைப் பாதுகாக்க, திருநாராயணபுரம் எனும் மேலக்கோட்டை, திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, பொங்கலூர் வழியாக திருப்பதி வரை தூக்கிச் சென்று மீண்டும் திருவரங்கக் கோயிலிலே வைக்கப்பட்டதைக் குமார கம்பண்ணன் மனைவி கங்காதேவி பதினைந்தாம் நூற்றாண்டில் பதிவு செய்திருக்கிறார்.
ஆனால் தமிழீழத்தில் அது சாத்தியமாகவில்லை.
“எங்கள் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள் ஏன் நடு நடுங்குகின்றன… அரிசியும் உப்பும் விளைந்த நிலத்தில் சவக்குழிகள்…. பெரும் கனவின் ரத்த கொப்புளங்கள் இதில் உள்ளன. அம்மாவின் நிழலே நிலம்.” எனும் வரிகளில் அவர்களின் வலிகள்.
ஒரு நாள் குமார கம்பண்ணன் முன் ஒரு வீரப்பெண் தோன்றித் தமிழகம் படும் அவல நிலையையும் பார்ப்பனச் சேரிகளில் புலால் நாற்றம் வீசுவதையும் மிருதங்க இசை நிறைந்த தெருக்களில் ஆந்தைகளின் அலறல் கேட்பதையும் வெண்மையாக ஓடி வரும் தாமிரபரணி ஆறு கொல்லப்பட்ட பசுக்களின் குருதியால் செந்நீராகி வருவதையும் எடுத்துரைத்துத் தன் கையிலிருந்த ஆற்றல் மிக்க வாளையும் அவன் முன் வைத்துப் படை எடுக்க ஆணையிட்டாள் என்று மதுரா விஜயம் விவரிக்கிறது.
அப்படித் தமிழீழப் போரில் தானாக முன்வந்து தெய்வங்கள் உதவியதாகத் தெரியவில்லை. மக்கள் உருகி உருகி வேண்டியும் தெய்வங்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக இராணுவத்திடமிருந்து மக்கள் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள்கள் இருந்திருக்கின்றனர் எனும் குமுறல்களைப் போதமும் காணாத போதத்தில் காண முடிகின்றன.
இது தமிழீழக் கனவுகளுக்குச் சொற்களால் அவர் எழுப்பியிருக்கும் நடுகல். இதில் வழிபாடும் உண்டு விசாரணையும் உண்டு. தொல்காப்பியம் தொடங்கி இன்றைய நினைவேந்தல் படத்திறப்பு வரையிலான தொடர்ச்சியில் இப்போதும் இருக்கிறது முன்னோர் வழிபாடு.
ஆனால் நடுகல் என்பது வெற்றி பெற்றதற்காக எடுக்கப்படுவது இல்லை. களத்தில் வீரச் சாவு அடைந்தவர்களுக்காக எடுக்கப்படுவது.
மக்களைக் காப்பாற்றத் தங்கள் உயிரைத் தந்தவர்களை வழிபடுவது. ஒருவகையில் நன்றிக்கடன் கூட.
ஆனால் நடுகல் வழிபாட்டிலும் நடந்தவற்றிற்கு நியாயம் கேட்கிறார் அகரமுதல்வன். ‘கடவுள் பக்தனைக் கைவிட்ட போதும் பக்தன் கடவுளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் கதைகளுக்கு’ இடையே அகரமுதல்வன் தெய்வங்களையும் விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிறார்.
சிலப்பதிகாரக் கண்ணகி “தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் .. காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்?” என்று மதுரை வீதியில் நீதி கேட்ட ஊர்சூழ்வரியை முன்னுரை ஆக்கியிருக்கிறார்.
“வைரவர் கோவிலில் இருந்த விக்கிரகத்தையும் சூலத்தையும் தூக்கி வந்து பதுங்குகுழிக்குள் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அவர் ‘பங்கர் வைரவர்’ ஆகியிருக்கிறார்.
“ நீ ஒரு சக்தியுள்ள தெய்வமெண்டால் என்ர மகள காப்பாத்திப் போடு” என்று சவால் விட்டிருக்கிறார்கள்.
“ ஆயிரம் தலைகொண்டு பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து ஏதேனும் செய்தி அனுப்புகிறாரோ” என்று பகடி செய்திருக்கிறார்கள்.
“இஞ்ச எல்லாப் பிள்ளையளும் பாரம்தான் சுமக்கினம். அவனும் சுமக்கட்டும். அது சிலுவையோ துவக்கோ என்ன வென்றாலும் கவலைப்பட ஏதுமில்லை.” இப்படி, சிலுவையும் துப்பாக்கியும் ஒன்றுதான் என்ற பார்வையைத் தருகிறார்.
மேலும் “எங்கட பாதர் சொல்லும் ‘தீர்ப்பு வழங்கப்படும் நாள்’ எப்ப வரும்?” என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
மூலஸ்தானத்திலிருந்த கலசத்தைக் காலணியால் ஓங்கி உதைத்திருக்கின்றனர். கனவில் வரும் காளியின் தலையில் கூட ஷெல் காயம் இருக்கிறது. ”ஒரு பீஸ் துண்டு காளியின் தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில் அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடிடுறா” என்று காளியைப் பற்றி கவலைப்பட்டிருக்கிறார்கள்.
“ தக்கன்ர சிரச, கைவாளினால் அறுத்த வீரபத்திரர் எங்களைக் காப்பாற்றாமல் நிக்கேக்கே அவர் வீரச் சாவு அடைஞ்சிட்டார். என்று உங்களுக்கு விளங்கேல்லையோ…” என்று காப்பாற்றாத கடவுள்களையும் எடுத்து விதைக்கப் போறேன்.” என்று வீரபத்திர சூலத்தைப் பீடத்திலிருந்து கிளப்பி விதைகுழிக்குள் வைத்திருக்கின்றனர்.
“ கர்த்தாவே! இது எத்தனை காலம் தொடரும், எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியும் என்றார்கள். எமக்காக ஒரு தீக்குச்சி அளவு கூட எரிய மாட்டேன் என்கிறீர்கள். எங்கள் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை.நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து மடியும் படியா நீர் எங்களைப் படைத்தீர்? “ என்று கேட்டிருக்கிறார்கள்.
“நீர் எங்கள் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தீர்? போர்ப் பகைவர்கள் அவனை வெற்றி கொள்ள அனுமதித்தீர்.எம் அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனைத் தரையில் வீசினீர். நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். நீர் அவனை அவமானப்படுத்தினீர்.” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
கோயில் சிலைகளைத் திருடுகிறவன் கூட “முருகனே.நான் செய்யுறது பிழைதான். ஆனால் வேற என்ன செய்ய ஏலும் சொல்லு. இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை”யைப் பெற்றிருக்கிறான். அவனைக் காவல் தெய்வம் வழி மறித்திருக்கிறது.
“சமாதானத்திற்கான யுத்தம். நல்லிணக்கத்திற்கான அரசு, போர்க்குற்ற உள்ளக விசாரணை போலக் காத்து நிற்கும் தெய்வம், எவ்வளவு பெரிய பம்மாத்து. சனியனே தள்ளி நில் என்று சுட்டியை எடுத்து ஓங்கியவனைக் கண்ட தெய்வம்” மறைந்திருக்கிறது.
கோவிலில் தீபாராதனை நடந்துகொண்டிருந்தபோது.தன்னுடைய பாவாடையைக் கழற்றிக் கருவறைக்குள் வீசிய அக்காவை – அவருக்கிருந்த ஒரே காலைக் கயிற்றால் கட்டிப் போட்டிருந்ததை வீட்டுக்கு வந்தவர்கள் பார்த்து, இவர்களைப் போன்ற கல் மனம் கொண்டவர்கள் யாரும் இல்லை எனச் சொன்னபோது “தெய்வத்தை விடவுமா” என்று கேள்வி கேட்டவர்களுக்கு யார் பதில் சொல்ல முடியும்?
“வீரபத்திரர் மட்டுமா தெய்வம் . இஞ்ச எங்களைக் காப்பாத்திற எல்லாரும் தெய்வம்தான்” என்று அவர்களைக் கொண்டாடும் போதே இயக்கத்தின் மீதும் விசாரணை படருகிறது
சங்கிலி பெரியப்பா வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவரும் தமிழீழத்திற்காகத்தான் ஆயுதம் ஏந்தியிருக்கிறார். பிறகு அந்த அமைப்போடு முரண்பட்டு, விலகி புலிகள் இயக்கத்தில் சரண் அடைந்திருக்கிறார். 1972 மே 2 ஆம் நாள் சங்கிலி பெரியப்பாவைப் புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றிருக்கிறது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்து கிடுகு பெரியம்மா கதறியிருக்கிறார். சுட்டதற்குக் காரணம் துரோகம் என்று சொல்லியிருக்கிறார்கள். துரோகம் என்றால் என்னம்மா என்ற மகனிடம் “நாங்கள் மனுஷராய்ப் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில் பிறந்ததுதான் துரோகம் “ என்று சொல்லியிருக்கிறார்.
இந்திய அமைதிப் படையின் தூக்கம் தொலைத்தவர் அதியமான்- பதுங்கிப் பாய்வதில் ருத்திர வேங்கையாக இருந்தவர். ‘சமர்க்கள மன்னன்’ என்று தலைவராலேயே பாராட்டப்பட்டவர். பிறகு முள்ளிவாய்க்காலில் வைத்து இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
படையியல் ரகசியங்களை எதிரிகளிடத்தில் சொல்லிவிட்டர் என்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
தகவல் அறிந்த அம்மா, “இத்தனை வருஷமாய் சண்டையிலே நிண்டு வாழ்க்கையை இழந்தவனுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுவோ என” முக்கிய பொறுப்பாளர்களைத் தேடிச் சென்று திட்டியிருக்கிறார்.
அதியமான் இப்படியான துரோகத்தைச் செய்வார் என நாங்களும் முதலில் நம்பவில்லை என அவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். விசாரணை செய்தவர்கள் ஏதோ பிழையாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள் என்ற போது அவர்கள் ஒரு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து விலகி நடந்திருக்கிறார்கள்.
“சனங்களின் ஆற்றாமையையும் கேள்விகளையும் பொருட்படுத்தாமல் விலகி நடக்கும் பாதங்கள் போராளிகள் உடையது அல்ல. அவர்கள் தங்களை ராஜாக்களென எண்ணுபவர்கள். தேசத்தில் உள்ள ஒரு தாயின் கண்ணீரை மதியாதவன் எதன் நிமித்தமும் விடுதலைக்கு வழி சமைப்பவன் அல்ல. உங்களுடைய துவக்குகளுக்கு இலக்குகள்தான் தேவையென்றால் என்னைப் போன்றவர்களைச் சுடுங்கள். ஒருபோதும் அதியமான் போன்ற அதிதீரர்களைக் கொல்லாதீர்கள். அவர்களின் ஆன்மாவுக்குத் துரோகம் இழைக்காதீர்கள் அவனைத் துரோகி எனச் சொல்ல யாருக்கும் அருகதை இல்லை எனக் கோபம் கொண்டு கத்தியிருக்கிறார்.“
“இயக்கம் அழிந்து போகப் போகிறது என அம்மாவும் சொல்லிய ஒரு பகல் பொழுதில் இரக்கமற்ற வகையில் வரலாற்றின் பாறையில் சூரிய ஒளி மங்கிச் சரிந்தது.” என்ற அகரமுதல்வனின் கோபத்தில் நியாயம் தெரிகிறது.
இவ்வளவு நடந்தபிறகும் – “எல்லாரும் எல்லாமும் சாம்பலா போச்சு எண்ணுக் கணக்கு இல்லாமல் பூமிக்குத் தின்ன கொடுத்தாச்சு” என்று கையறுநிலைக்கு ஆளாக்கும் குரல் ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் கடந்து ‘ரத்தம் கொடுத்தது நான் இல்லை நிலம்’ என்று நினைத்திருக்கிறார்கள்.
புலியாக இருந்த ஆதாவும் இராணுவ வீரனாக இருந்து சமிந்தாவும் போர் முடிந்த கலத்தில் சந்திப்பதும் காதலிப்பதும் அவர்கள் யுத்த காலத்தை மறக்க நினைக்கிற தருணங்களாக இருக்கின்றன. யுத்த காலத்திலும் யுத்த கொடூரங்களிலிருந்து மக்கள் தப்பிக்கும் தருணங்கள் அவர்கள் காதலிக்கிற காலங்களாகவே இருந்திருக்கின்றன என்பதும் ‘யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடம் இதுதான்’ என்பதையும் உளவியலோடு அகர முதல்வன் உறுதிப்படுத்துகிறார்.
எல்லாம் முடிந்த பின்பும் விசாரணை நிற்கவில்லை. அப்போதும் இயக்கத்தை விட்டுக் கொடுக்காமல் ‘என்றைக்கும் ஆதரிப்பேன்’ என்று நிற்கிறவர்களைப் பார்க்க முடிகிறது. ஏனெனில் ‘மண்ணை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்’ என்று நம்புகிறார்கள்.
“ஒரு கதைக்கு மாவீரரே எழும்பி வந்தாலும் இவங்கள் பிடிச்சுக் கொண்டு போய் பயிற்சி குடுப்பாங்கள்” என்று நினைக்கிறார்கள்.
இப்படியான கொந்தளிப்பான வாழ்க்கை நினைவுகளை ஈழத் தாழியிலிருந்து அகழ்ந்தெடுத்திருக்கிறார் அகரமுதல்வன்.
“வீர யுகத்தின் அந்தி நந்திக் கடலில் சாய்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று கடலில் தொடங்குகிறார். “அம்மாவின் குருதியிலிருந்து அந்தத் தோட்டாவை எடுத்துக் கடலில் வீசினேன். உயிர் ஈந்த தேவபித்ருக்களோடு அதுவும் நீந்தியது” என்று தொடரும் இயக்கத் தொடர்ச்சியைக் கடலில் முடிக்கிறார்.
கடல், காலத்தால் அழிக்க முடியாத குறியீடு. கையில் உள்ள துளி கரைந்து போகாமல் கடலில் கலக்க விட்டது போலத் தோட்டாவைக் கடலில் வீசுகிறார். அதுவும் நீருக்குள் அமிழாமல் நீந்தியது என்று சொல்கிறார்.
சிறுவயதிலிருந்தே எழுத்தையும் இலக்கியத்தையும் உறவாக்கிக் கொண்டவர் சைவப் பதிகங்கள்,சைவச் சமயச் சொற்பொழிவுகள், நிகழ்த்து கலைகள் எனும் பண்பாட்டுப் பின்னணியோடு கூடிய போர் அவல அனுபவங்கள் எடுத்துரைப்பில் செழுமை சேர்த்திருக்கின்றன. பைபிள் தமிழும் பக்தித் தமிழும் சங்கத்தமிழும் கலந்த மொழி ஆளுமை வியக்க வைக்கிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவநம்பிக்கையின் ஆதிக்க வெளியில் வாழ்க்கை நடந்த போதும் சொற்களால் இதில் வரும் அம்மா புதிய நம்பிக்கையை விதைக்கிறார்.
“ எங்கட முதுசமாய் இருக்கிற வித்துடல்.அது எண்டைக்கோ ஒருநாள் உயிர்த்தெழுமடா தம்பியா” -ஆரின்ர வித்துடல் என்று அறம்பாவை அத்தையிடம் கேட்டதும் என் பின்னே வந்து நின்ற அம்மா “எங்கட மண்ணோட வித்துடல் என்றாள்”.
முதுசொம் – முந்தைய தலைமுறையிலிருந்து கிடைக்கும் சொத்து.
அகரமுதல்வன், தமிழீழ நினைவுகளைத் தமிழுக்கு முதுசொம் ஆக்கியிருக்கிறார்.
***