திரைப்படத்துறையில் தான் அதிகமான வினோதப் பழக்கங்கள் கொண்டவர்களைச் சந்திக்க முடியும். இந்த வாக்கியத்தை எழுதி முடித்ததும் நினைவில் வருபவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். சிலரைச் சென்னை வாழ்க்கை அப்படி மாற்றிவிடும் போலும். சிலருக்கு அதுவொரு பிழைப்பின் பாதை. இன்னும் சிலருக்கோ அதுதான் பிழைப்பு. வினோதமான பழக்கங்கள் வகை வகையாக இருக்கின்றன. ஒரு நண்பருக்கு எப்போதுமே தேநீர் சாப்பிடவேண்டும். இன்னொருவருக்கு புறணி (back- biting ) பேசுதல் வேண்டும். இன்னும் சிலரோ தமது வேலையில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர்கள். அவர்களே தமக்கென ஒரு அடையாளத்தை உண்டு பண்ணி திரைத்துறையில் வெல்கிறார்கள்.

திரைப்படங்களில் நடிப்பதற்காக முயற்சிக்கும் என்னுடைய நெருங்கிய நண்பரொருவருடன் இரண்டு நாட்களுக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்தேன். அவருக்கு சில வலையொளி ஊடகங்களைப் பார்த்து சினிமா செய்திகளை நம்பும் நாள்பட்ட வியாதி உண்டு. பல நேரங்களில் அவரைக் கண்டித்திருக்கிறேன். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தியதில்லை. இந்தப் பயணத்தில் ஒரு வலையொளிக் கதையை அளந்துவிட்டார்.

அதாவது இந்திய சினிமாவின் மிக முக்கியமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர், தன்னுடைய திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவரின் வீட்டு வாசலுக்கு அதிகாலையிலேயே சென்றுவிடுகிறாராம். அந்த நடிகர் ஏனைய திரைப்படங்களுக்கு செய்வதைப் போல, தன்னுடைய படத்திற்கும் ஒப்புக்கொண்ட வகையில், படப்பிடிப்புத் தளத்திற்கு வரமாட்டாரோ என்ற பயமே இயக்குனரின் இந்த அதிகாலை விஜயத்திற்கு காரணமாம் என்றார். கேட்டதும் மண்டை சூடாகி விட்டது. எனக்கு இதுமாதிரியான அசட்டுத் தகவல்களை விடவும், இதைக் காவித் திரியும் Gossip தூக்கிகள் மீதுதான் ஆத்திரமும் கவலையும். நண்பனை உரிமையாகத் திட்டினேன். கெட்டவார்த்தை பேசாத ஒளிப்பதிவாளரே அன்று என்னுடன் சேர்ந்து கொண்டார். நண்பன் அசரவில்லை. “ஏப்பா…அந்தச் சானலில உண்மை தான் சொல்லுவாங்க. அதுதான் நான் சொல்கிறேன்” என்று அடம்பிடித்தார். பிறகு காருக்குள் கடுமையான சொல்லகராதிகளின் பக்கங்களை புரட்டித் திட்டி ஓய்ந்தோம். ஆனாலும் அந்த நண்பர் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதில் உறுதியாகவே இருந்தார்.

இன்னொரு நண்பர் கொஞ்சம் பயந்த சுபாவி. மற்றவர்க்கு தீமையே எண்ணாத தனிப்பெருங்கருணை கொண்ட உயிரி. சினிமாவில் தன்னை வீழ்த்துவதற்கு கோடம்பாக்கமே ஒரு சதிக்கோட்பாட்டை வைத்திருப்பதாக ஆழமாக நம்புகிறார். நாள்தோறும் குடித்த சரக்கு பாட்டில்களை மாதக் கடைசியில் தூக்கி வீசும் போது, இரண்டு சினிமா அலுவலகங்களுக்கு சென்று தனது புகைப்படங்களைக் கொடுத்து நடிக்க வாய்ப்புக் கேட்பார். இன்னும் இரண்டு நாட்களுக்கு நண்பர்களோடு சேர்ந்து அரட்டையும், வாய்ப்புத் தேடிய கதைகளையும் பேசி, ஏதேனும் நாளாந்த வேலைக்குச் சென்று இரவில் திரும்பும் போது, மதுபானக்கடைக்குச் சென்று சரக்கை வாங்கி அறைக்குள் புகுவார்.

குடித்த பின்னர் அவர் நடிகர் ஆகி நிகழும் காட்சிகளைப் பார்க்க பயமாகவிருக்கும்.

ஒருமழை நாளில் அவரது அறையில் ஒதுங்கியிருந்தேன். அவர் கொஞ்சம் குடித்திருந்தார். எனக்கு முன்னால் குடிப்பது மரியாதை இல்லை என்கிற அறிவிப்பு வேறு. “நண்பா! அருமையான ஒரு சினிமாவில நான் நடிக்கணும், அதை நீங்க டைரக்ட் பண்ணனும்” என்று தொடங்கினார். எனக்கு அசட்டுத் தைரியம் இல்லை. ஆதலால் பதில் ஏதும் பேசாமல் இருந்தேன். நண்பர் திடீரென சிவாஜி மாதிரி வசனங்கள் பேசத்தொடங்கினார். எம். ஆர். ராதாவின் வசனங்களை ஞாபகத்தில் இருந்து பேசி நடித்தார். அந்தக் காட்சியில் அவர் குடித்திருக்கிறார். ஆகவே இவரும் நடிப்பிற்காக தன்னிடமிருந்த சரக்கை குடிக்கிறார். காட்சிகள் மாறுகின்றன. நடிகர்கள் மாறுகின்றனர். ஆனால் இந்தக் காலநிலை மட்டும் கொஞ்ச நேரம் மாறி கருணை காட்டக்கூடாதா என்று கடவுளை வேண்டினேன். அன்றைக்கு கடவுள் என்னைச் சோதித்தார். நண்பர் குடித்து குடித்து என்னை “நீயெல்லாம் எப்படா தாவோளி படம் பண்ணுவாய்” என்று கேட்கும் வரை வெளியே நல்ல மழை. முகநூலில் நிறையப் பேர் ஜன்னலோரம் ஒரு தேனீர் கோப்பையை வைத்து

தேனீர்

இளையராஜா

மழை

என்று ஜென் கவிதைகளைப் பதிவிட்டபடியிருந்தனர். நான் நடிகரிடம் புறப்படுகிறேன் என்று சொல்லிவிட்டு மழையையும் பொருட்படுத்தாமல் வீட்டிற்கு தப்பி வந்தேன்.

அடுத்தநாள் மதியம் அழைத்திருந்த நடிகர், என்னிடம் மன்னிப்புக் கேட்டார். உங்களை நான் கெட்டவார்த்தையில் திட்டியிருக்க கூடாது என்றார்.

அதை விடுங்கள் போதையில் பேசுவது தானே என்றேன்.

இல்லையில்லை, அப்படித்திட்டும் போது நான் போதையில்லை, நடித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லையா! பாருங்களேன் உண்மையான ஒரு போதையாளாக என்னை நீங்கள் நம்பும் அளவுக்கு நடித்திருக்கிறேன் என்று மகிழ்ந்து கொண்டார்.

நல்லது நடிகரே என்றேன்.

இந்தக் கோடம்பாக்கத்தில எனக்கொரு கொடி பறக்கும் காலம் வரும் பாருங்கள் என்றார்.

அந்த நண்பரை சில நாட்களுக்கு முன்பாக  அடையாறிலுள்ள அசைவ உணவகத்தில் சந்தித்தேன். மெலிந்து அடையாளம் அழிந்திருந்தார். என்னாச்சு உடம்புக்கு ஏதேனும் சுகமில்லையா? என்றேன். அட, அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு படத்துக்காக மெலிந்திருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் நல்ல செய்தி வரும் காத்திருங்கள் என்றார்.

இன்னொருவர் கொஞ்சம் விசித்திரமான சக்தி. புழுதி தான் நம்ம சட்டை என்று எழுதிய முத்துக்குமாரின் பாட்டைப் புரட்டி பொய் தான் நம்ம சட்டை என்று அணிந்திருப்பவர். வாய் திறந்தால் பொய். ஆனால் யோக்கியத்தின் சிகரமாக பேசக்கூடியவர். யாருக்கும் உண்மையாக இருப்பவர் கிடையாது. சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர். என்னுடைய நெருங்கிய நீண்ட நாள் நண்பர். ஆனால் அவரைப் பற்றி அறிந்த செய்திகள் ஒன்றும் நல்லவையாக இல்லை. நிறையவே சோக்கு கொண்டவர். ஆனால் இந்த நண்பரிடம் எல்லாவற்றையும் எளிமையாக்கும் சக்தி இருக்கிறது. உதாரணமாக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்றால், அட நம்ம பன்சாலி என்று பேசக்கூடியவர்.

உங்களுக்கு அவரைத் தெரியுமா என்று கேட்குமளவுக்கு உரிமையாக பேசக்கூடியவர்.

அன்றைக்கு அப்படித்தான் இந்த நண்பரை ஒரு திருமண விழாவில் சந்திக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகான சந்திப்பு. என்ன போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்பதே சினிமாக்காரர்களின் குசலம். அவர் முந்திக் கொண்டார். நான் சொன்னேன். அந்த இயக்குனரா அவர் முக்கியமான ஆளு. முன்ன ஒரு பொண்ணு கூட இருக்குமே, இப்ப இருக்கான்னு கேட்டார். எனக்குத் தெரியாது. நான் ஆபிஸ் போன வேலை பார்த்து திரும்பிவிடுவேன். அங்கு யார் இருக்கிறார்கள் இல்லையென்பதைப் பார்ப்பது என் வேலை இல்லை என்றேன்.

உங்களுக்கு என்ன போய்க்கொண்டிருக்கிறது என்றேன். மூன்று வேலைகளை அடுக்கடுக்காகச் சொன்னார்.

மராட்டியில் ஒரு படம் பேசிக்கொண்டிருக்கிறேன். இங்கே தமிழில் ஒருவருக்கு எழுதுகிறேன். அந்த இயக்குனருக்கு எதுவும் தெரியவில்லை. வேலையை முடிச்சு காசு வாங்கிட்டா போதும். அடுத்து மலையாளத்தில ஒரு பெரிய படம். அதில நான் கடலூர் ஸ்லாங் வெர்க் பண்ணுறேன் என்றார்.

இந்த நண்பருக்கு முன்னமிருந்த சிக்கல்களை விடவும் இப்போது நிறையவே இருக்கின்றன. முன்பு இணையாகவிருந்தவர் உறவிலிருந்து வெளியேறி விட்டார். இப்போது தனியனாக இருக்கிறார். அப்படித்தான் சொல்லியுமிருந்தார். ஆனால் அவருக்கு இணை சேர்ப்பதில் கஷ்டம் இருந்ததில்லைப் போலும்! நான் குறிப்பிட்ட அந்த சினிமா அலுவலகத்தில் அவர் விசாரித்த மங்கையோடு உறவு கண்டிருந்தார். அவர்கள் இருவரையும் ஒரு வேறொரு திருமண விழாவில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் வணக்கம் வைத்துவிட்டு வாழ்த்துக்கள் என்றேன்.  சில நாட்களுக்கு முன்பாக இந்த் நண்பர் என்னைப் பார்க்கவேண்டுமென தகவல் அனுப்பியிருந்தார்.

என்ன விஷயம் சொல்லுங்கள்.

“நானும் அவளும் பிரிஞ்சிட்டோம். எனக்கு சினிமாவும் வேண்டாம் எதுவும் வேண்டாம். என்னோட ஒரு கதையிருக்கு. அதை ஒரு நல்ல காசுக்கு வித்துக் கொடுங்கன்னு” கொஞ்சம் சத்தமாகப் பேசினார்.

என்ன கதை? க்ரைமா? லவ்வா?

“என்னங்க இப்பிடிக் கேட்டிட்டிங்க! என்னைப் பார்த்தா இப்பிடி? என்ன கதை வேணும்னு சொல்லுங்க. என்னோட உக்கார்ந்து பேசுங்க. எவ்வளவு கதை வேணும். செம்பரம்பாக்கம் தண்ணி மாதிரி கதையால உங்களை மூழ்கடிச்சிடுவேன்” என்றான்.

“அதுக்கெல்லாம் நேரம் இல்லை. உங்ககிட்ட ரெடியா இருக்க கதை என்ன?”

“நானும் அவளும் சேர்ந்து வாழ்ந்த இந்த மூணு மாசத்தை வைச்சு ஒரு கதை டெவலப் பண்ணிட்டு இருக்கேன். ரெண்டு நாள்ல ரெடியாகிடும்” என்றான்.

சரி முடித்து விட்டு அழையுங்கள். படிக்கிறேன். என்று சொன்னேன்.

பின்னால் ஓடிவந்து என் கைகளைப் பிடித்து “நண்பா! ஊருக்குப் போகணும் ஏதேனும் பைசா இருந்தா ரெடி பண்ணிக்குடுங்க. வந்து தருகிறேன்” என்றான்.

“இப்ப என்ன அவசரம். இருந்து கதையை எழுதுங்க” என்றேன்.

“இல்லை நண்பா. எனக்கு குழந்தை பிறந்திருக்கு. போய்ப் பார்க்கணும்”

“நீ கலியாணம் பண்ணிட்டியா?” அதிர்ச்சியுடன் கேட்டேன்.

“ஆமா நண்பா…ஊர்ல இருக்காங்க. இது ரெண்டாவது Wife- ஓட முதல் குழந்தை” என்றான்.

காசைக் கொடுத்து விட்டு வந்தேன்.

அடுத்தநாள் வடபழனி பேருந்து நிலையத்தில் அவனைக் கண்டேன். “என்ன ஊருக்கு போகலையா இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்றேன்.

ஊருக்கா எதுக்கு?

அதுதான் குழந்தை பிறந்திருக்குன்னு சொன்னீங்களே என்று சொல்வதற்கு முன்பாக என்னுடைய கையை இறுகப்பற்றிக் கொண்டு இழுத்தான். பக்கத்தில் நின்ற பெண்ணொருத்தி என்னையும் அவனையும் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

“அண்ணே, இந்த விஷயத்தை யார்கிட்டையும் சொல்லாதீங்கன்னு கேட்க மாட்டேன். ஆனா இந்த இடத்தில சொல்லாதீங்க. இந்தப் பொண்ணு கூட நேற்றைக்கு இருக்க வேண்டியதாய் ஆகிடுச்சு. அதுதான் அப்பிடி பொய் சொல்லி காசு வாங்கினேன்” என்றான்.

“உனக்கு கலியாணம் ஆச்சா இல்லையா”?

“ஆச்சுன்னே. அதுதான் சொல்றேனே நேற்றைக்கும் ஆச்சு. சும்மா போங்கண்ணே. என்று கொஞ்சம் என்னையே எளிமைப்படுத்திய நண்பன். அண்ணே இந்த விஷயத்தை வேறு யார்கிட்டையும் சொல்லிடாதீங்க. அதில நிக்கிற பொண்ணு ரொம்ப முக்கியமான நடிகையாகப் போகிற ஆளுண்ணே. நம்ம படத்தில கதாநாயகியா போட்டுக்கிடலாம். அதுக்கு நான் கேரண்டி” என்றான்.

“இல்லப்பா எனக்கு சினிமா பண்ணுகிற ஐடியா இல்ல”

“அப்புறம் என்ன அண்ணே பண்ணப்போறீங்க” – நண்பன் கேட்டான்.

“உனக்கு அசிஸ்டெண்ட்டா சேர்ந்திடலாம்னு தோணுது”

சரி நாளைக்கு வாங்க பேசலாம் என்றான்.

கடவுள் என்னைச் சோதித்தபடியே இருக்கிறார்.

***

 

 

 

Loading
Back To Top