
அன்றாடங் காய்ச்சி
கவிதையில்
அன்றாடத்தை
எழுதலாமா
என்கிறாய்
எழுதலாம் தான்
அதுவே
அன்றாடமாகிவிடக்கூடாது
அன்பே.
துக்கடா
திரியை நிமிர்த்தித்
தீ வளர்ப்பாய்
பின்
னொரு
மலரை
யொற்றிச்
சுடரணைப்பாய்.
மஞ்சள் பூத்த சிறுகற்குறிப்புகள்
ஒரு கைக்குட்டையளவு மிகுனும்
துணி துவைக்கும் எந்திரத்திலிருந்து
அதன் கனைப்பொலி கேட்பதை
நானும் கவனித்திருக்கிறேன்
நமது நிலத்திலிருந்து
அந்தச் சின்னக் குதிரைகளை
விரட்டியது யார்
பெருக்கெடுத்த ஓடைகளை
நுரைத்த ஆறுகளை
தளும்பிய குளங்களை
உடைப்பெடுத்த கண்மாய்களைத்
தன் முதுகிலேற்றிக் கொண்டு
மீளாப் பாதையில் தடங்களற்றுப்
போயே போயின ஏன்
தம்மைப் போஷித்த கருணையை
சாதிச்சொல்லெறிந்து
அவமதித்தவர்களுக்கெதிரான
வசைக் குறிப்புகளை
வறண்ட நீர்நிலைகளின் சிறுகற்களில்
அவை விட்டுச் சென்றிருக்கக்கூடும்.