
முருகன் அவதார சரிதத்தில் இந்திரன் தொடர்பும் உள்ளது. இறைவன் உமாதேவியாரோடு கூடியின்புற்றதினால் தோன்றிய கருவை, இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் சிதைத்துவிடுகிறான். பின், அக்கருவை எழுமுனிவரும் பெற்று அக்கினியில் அவியோடு சொரிகின்றனர். அம் முனிபத்தினியருள் அருந்ததி ஒழிந்த ஏனைக் கார்த்திகை மாதர் அறுவரும் அங்கியில் பெய்ததனை அருந்திக் கருக்கொண்டு, சரவணப் பொய்கையில் தாமரைப் பூவிலே முருகனைக் கருவுயிர்த்தனர். முருகன் பிறந்த அன்றே இந்திரன் இகல் மிகுதியால் தன் வச்சிராயுதத்தினாலே எறிய; அக்குழந்தை ஆறு வேறு உருவாகிப் பின் ஓர் உருவாய் ஆறுமுகத்தோடு அமைகிறது. குழவிப்பருவத்தில் படைக்கலம் இன்றியே செய்த போருக்கு இந்திரன் தோற்றுவிடுகிறான். பேராற்றல் படைத்த இவனே தனது சேனைக்குத் தலைவனாதற்குரியன் என இந்திரன் கருதுகிறான்.
https://www.kurugu.in/2024/06/gods-in-tamil-sangam.html