
01
சிறகிலிருந்து பிரிந்த
இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் சென்றதாகப்
பாடினான்
பிரமிள்.
காற்றின் தீராத பக்கங்களில்
அவனையெழுதும்
கவிதை
மொழியிலிருந்து பிரிந்து
என்னிடம் வந்தது.
02
அநாதியிலும் – ஆதியிலுமிருந்து
அழைத்து வரப்பட்ட எனக்கு
என்ன பெயர் அறியேன்.
ஆனாலும் போதும்
மனிதன் நான்.
03
காகிதங்கள் படகுகளாகின்றன
தாழ்வாரங்கள் அருவிகளாகின்றன.
அருவியில் நனைந்து
காகிதப் படகின் பின்னோடி
நிலத்தில் கால் வைத்தால்
மழையோ
மழை.