
01
சதா காலையில்
வந்தமர்ந்து பாடுகிறது
குயில்
இத்தனை யுகங்களாய்
இலையடர்ந்த மரத்தின்
எந்தக் கிளையில்
அமர்ந்திருக்குமோ
தெரியாது
இன்றைக்கு காலையில்
குயிலைக் கண்டேன்
என்னையும் அது கண்டுவிட்டது.
பிறகென்ன
கிளையில் உந்தி எழுந்து பறந்தது
எல்லாம் உதிர்ந்து
மரமென தனித்தது
பாடல்.
02
வைரவர் சந்நிதியில்
அகல் விளக்கை ஏற்றிவைத்தேன்
காலம் போல துடித்தது சுடர்
காலம் போல ஒளிர்ந்தது சந்நிதி.